வெள்ளி, 11 ஜூன், 2010

சாரு மற்றும் நீயா? நானா? சர்ச்சை-கடைசி பதிவு


கடந்த சில நாட்களாக பதிவர்களிடையே மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் என் கருத்தை பதிவு செய்ய வேண்டியிருப்பது,சாரு வின் ரசிகனாக மட்டும் அல்ல.ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் அவசியமாகிறது.அவை,

1 . சாருவை அந்த நிகழ்ச்சியில் அவமானப்படுத்தியதாக சொல்லப்படுவது பற்றி......................

யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.சாருவும் அப்படித்தான்.இதை அவரே ஒத்துக்கொள்வார்.சாரு நித்தி யை ஆதரித்தது தவறு என்று
கோபி(ஆண்டனி?!) கூறியிருந்தால் அதில் தவறேதும் இல்லை.அது அவர்கள் கருத்து.இதில் நாம் சொல்ல ஒன்றுமில்லை.சாருவாச்சு கோபியாச்சு என்று விட்டு விடலாம்.ஆனால் அதை நீங்கள் ஒத்துக்கொண்டு உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று அவரை வற்புறுத்தியது மிகுந்த கண்டனத்துக்குரியது."நீ செய்தது தவறு என்று யாரிடம் வேண்டுமானாலும் சொல்ல எனக்கு உரிமையிருக்கிறது.ஆனால் அதை அவர்கள் ஏற்று மன்னிப்பு கோர வேண்டும் என்று நான் நினைத்தால் அது சர்வாதிகாரம் அன்றி வேறேதும் இல்லை."என்பதே என் கருத்து.அதன்படி பார்த்தால் இவ்விஷயத்தில் நீயா நானா குழுவினருக்கும்,அதன் இயக்குனர் ஆண்டனி,ஒளிபரப்பிய விஜய் டிவி அனைவருக்கும் எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

2 .சாரு- நித்தி exposure முன் பின்.................

இதை விவாதிக்க சாரு வின் வாசகர்களை தவிர வேறு எவருக்கும் உரிமை இல்லை.ஏனெனில் சாரு வை முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே இவ்விஷயத்தை பற்றி ஒரு சரியான முடிவிற்கு வரமுடியும்.நித்தி exposure ஐ சாரு சற்று பரிதாபமாக தான் எதிர்கொண்டார் என்றே நான் கருதுகிறேன்.
"ஆமாம் அப்படிதாண்டா எழுதுவேன்.என் இஷ்டம்" என்று இவர்கள் முகத்தில் அடித்தமாதிரி சொல்லியிருக்க வேண்டும்.ஏனெனில், அவர் எழுதிய,எழுதிக்கொண்டிருக்கும் உலக இலக்கியங்களையும்,நவீன இசைச் சூழலையும்,திரைப்பட,சமூக விஷயங்களையும்(புத்தகங்களை விடுங்கள்) படிக்காத மூடர்கள் தான் இன்று அவர் நித்தி இடம் லட்ச லட்சமாக பணம் வாங்கிகொண்டு எழுதினார் என்று குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகின்றனர்.
என் போன்ற வாசகர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.அவர் அனுபவித்ததை எழுதினார்.அவர் எழுதியதை நாங்கள் அனுபவித்தோம்.அவ்வளவுதான்.ஒரு வேளை,அவர் நித்தியிடம் பணம் வாங்கியிருந்தாலும் எனக்கு ஒரு கவலையுமில்லை.எனக்கு என்ன வேண்டுமோ? அது சாருவின் எழுத்தில் எனக்கு கிடைக்கிறது.அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார்?எப்படி சம்பாதிக்கிறார்? என்பதெல்லாம் தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வமில்லை.
நான் என்ன income tax அதிகாரியா?

ஆனால் ஒன்று, சாருவின் "தப்புத்தாளங்கள்" புத்தகத்தில் நித்தி யின் லீலைகள் குறித்து ஒரு பகுதி வருகிறது.2004 ம் ஆண்டு வாக்கிலேயே சாருவுக்கு நித்தியை பற்றி நியூஸ் கிடைத்துள்ளது.இது பற்றி சாருவிடம் சற்று வேகமாகவே தொலைபேசியிலும்,கடிதத்திலும் தொடர்பு கொண்டபோது, அவர் அதற்கு அளித்த விளக்கம் எனக்கு ஏற்று கொள்ளக்கூடியதாக இருந்தது.பிற்பாடு நான் குறிப்பிட்டதை குமுதம் ரிப்போர்ட்டரில் வரும் தொடரில் பயன்படுத்திகொள்வதாக கூறினார். அதை குறிப்பிட்டாரா என்று தெரியவில்லை . நான் அந்த மாதிரி புத்தகங்களை வாங்குவதில்லை.எப்படியும் புத்தக வடிவில் வரும் காசு கொடுத்து வாங்கி பத்திரப் படுத்தி கொள்ளலாம்.

3 . இனி விஜய் டிவியில் சாரு?............................

இது விஜய் டிவி நிறுவனத்துக்கும் சாருக்கும் இடையில் உள்ளது.அவர்கள் கண்டிப்பாக திரும்பவும் அழைப்பார்கள்.அப்பொழுது சாரு கலந்து கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம்.இவ்விஷயத்தில் நம் எழுத்தாளர்கள் சற்று அரசியல்வாதிகளை போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து

வியாழன், 10 ஜூன், 2010

வந்துட்டேன்!

கடந்த 2 மாதங்களாக எந்த பதிவும் போடாமல் ஊர் சுற்றிகொண்டிருந்த என்னை,கடிதம்,தொலைபேசி,ஈமெயில்,sms ,கொரியர் சர்வீஸ்,புறா என்று பல வழிகளில் தொடர்பு கொண்ட லட்சோப லட்சம் அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி.கடந்த இரு மாதமாக அண்டார்டிக்கா வில் நடந்த world english red language மாநாட்டிற்கு சென்றுவிட்டதால் எந்த பதிவையும் இட முடியவில்லை.அந்த மாநாட்டிற்கு சென்று வந்ததின் மூலம் இங்கிலீஷ் அறிஞர் என்ற பட்டமும் எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை உள மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறேன்.இனி, நாளை முதல் வழக்கம் போல் பதிவுகள் தொடரும்.

பின் குறிப்பு:
அது யாருங்க அது பதிவை படிக்கும் போது ஆயுதங்களை எடுக்கறது? என்ன பழக்கம் இது?அடிச்சா உடையறது உங்க monitor தான்! பாத்துகிடுங்க!எவன் எவனோ என்னென்னமோ கதை வுடறான்!அதை எல்லாம் நம்பறீங்க!நான் சொன்னா நம்பமாட்டீங்களா?!

செவ்வாய், 30 மார்ச், 2010

தொலையும் அடையாளம்

நடுநிசி இரவின்
நீண்ட ஒற்றை பயணங்களில்
காலடி சருகுகளின் மிதிபடும்
ஓசையை ரசிக்கும் யாத்ரிகனின்
இனிய பொழுதுகளில் அறிவதில்லை
அவன் காலடி சுவடு மண்ணில் பதியாதது!

சனி, 20 மார்ச், 2010

சுவாரசியம்

மிகவும் சுவாரசியமாகவும் நக்கல்,குறும்பு கொப்பளிக்கவும் தமிழில் வலைப்பூ எழுதுபவர்கள் மிகவும் குறைவு.நான் பார்த்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த மாதிரி வரிக்கு வரி ரசிக்க வைக்கிறார் இந்த மனிதர்.அவசியம் படிக்கவும்.

http://aveenga.blogspot.com

வியாழன், 11 மார்ச், 2010

எக்ஸ்போசரும் பேன்சி கோவணமும்


நித்யானந்தர் யாருக்கு நன்மை புரிந்தாரோ இல்லையோ?நிச்சயமாக மீடியாக்களுக்கு சரியான வசூல் என்பதில் சந்தேகமில்லை.அதிலும் சன் டிவி யும்,நக்கீரனும் சிறப்பாக கல்லா கட்டிவிட்டதாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களைப் பற்றி அனைவருக்கும் தெரிந்ததால்,இதை யாரும் பெரிதாக பேசவில்லை.இந்த நிலையில் நாம் பெரிதாக கவலைப் பட்டிருந்தது, சாரு வைப் பற்றிதான்.இந்த விவகாரத்தில் அவரை தேவையில்லாமல் உள்ளே இழுத்து நாறடித்துவிடுவார்களே, என்று தான் மிகவும் கவலைப்பட்டோம்.இதனால் அவருடைய எழுத்து தடை பட கூடாது என்பதே நம் பிரார்த்தனையாக இருந்தது.

ஆனால் மனிதர் விட்டார் பாருங்கள் ஒரு அறிவிப்பு!நாமே சற்று ஆடித்தான் போய்விட்டோம்!நித்யானந்தர் பற்றிய புதிய தொடர் ஒன்றை சாரு எழுதப் போகிறார்! இம்முறை இணையத்தில் அல்ல!குமுதம் ரிப்போர்டர் பத்திரிகையில்.பின்னே இதையும் காசு கொடுக்காமல் ஓசியில் படிக்கலாம் என்றா நினைக்கிறீர்கள்?நடக்காது.நித்யானந்தர் பெயரைப் போட்டு எந்த கழுதை எழுதினாலும் நன்றாக கல்லா கட்டும் இந்த நேரத்தில், குமுதம் ரிப்போர்டர் சரியான ஆளைப் பிடித்துவிட்டது.கண்டிப்பாக இருவருமே காசு பார்த்துவிடுவார்கள் என்பது நிச்சயம்.

ஆனால் நம்மைப் போன்ற நீண்ட நாள் சாரு வாசகர்களுக்கு இது சிறிது வருத்தமே ஏற்படுகிறது.அவர் குமுதத்தில் எழுதுவதால் அல்ல.தாராளமாக எழுதட்டும்.அவருடைய எழுத்து வெகு ஜனப் பத்திரிகைகளில் அடிக்கடி வர வேண்டும், என்பதே நம் விருப்பம்.ஆனால் அது நித்யானந்தரை குறித்து என்று என்னும்பொழுதுதான் சற்று வருத்தமாக உள்ளது.சாரு விடம் எழுதுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.இன்னும் அவரிடமிருந்து நவீன உலக இலக்கியங்களை இங்குள்ள எழுத்தாளர்களே அறிந்து கொண்டிருக்க வில்லை.அதை முழுவதும் எழுதி முடிக்கவே அவர் ஆயுள் போதாது என்று அவரே கூறியிருக்கிறார்.இந்நிலையில் அவர் நூறு பேர் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை ஒரு புலனாய்வு(?) பத்திரிகையில் எழுதப் போகிறார் என்றால்...........மன்னியுங்கள் சாரு. நாங்கள் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை.தங்கள் நேரத்தை இந்த குப்பைகளில் ஏன் செலவு செய்கிறீர்கள்?எவ்வளவு பேர் உங்கள் எழுத்தை படிக்கிறார்கள் என்பதில்லை.என்ன படிக்கிறார்கள்? என்பதே முக்கியம்.இதுவும் அவர் சொன்னதுதான்.

ஏற்கனவே அவரை சிலர் கிசு கிசு எழுத்தாளர் என்று நாக்கில் நரம்பில்லாமல் விமர்சிக்கிறார்கள்.இந்நிலையில் இது வேறு இப்பொழுது?சரி.எதுவும் நம் கையில் இல்லை.நடப்பது நடக்கட்டும்.


பின் குறிப்பு:
சாருவின் நித்யானந்தர் குறித்த பேட்டி, இன்று மாலை பதிவேற்றம் செய்யப்படும்.(அவர் நமக்கு பேட்டி கொடுக்கப் போகிறாரா என்ன? வழக்கம் போல் நமது கற்பனையில்தான்!ஹி ஹி ஹி!)

புதன், 3 மார்ச், 2010

2010 ன் சூப்பர் ஹிட் பாடல்- உருவான விதம்

வாசகர்களில் பலர் ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்று தெரியாமல் இருக்கலாம்! எதற்கு கவலை பொழுது போகாமல் சும்மா ஒருவன் இருக்கும் பொழுது? இதோ உங்கள் ஆசையை நிறைவேற்றவே இந்த பதிவு.(இதில் குறிப்பிடுவன அனைத்தும் கற்பனையே...(என்று நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்)).

கோடம்பாக்கத்தில் ஒரு பிரபலமான ரெகார்டிங் தியேட்டர்.உள்ளே சற்று எட்டிப் பார்த்தேன்.ஆனந்த அதிர்ச்சி அடைந்தேன்.தமிழகத்தின் பெரிய தளபதி,சிறிய தலை,vice கேப்டன் அஜய் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க பாடல் பதிவு அது.கூடவே மியூசிக் டைரக்டர் பழைய ராஜா.........(அய்யய்யோ அவர் வேண்டாம்...வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்).............சரி... யாரோ ஒருத்தர்...பெயரில் என்ன இருக்கிறது?

டைரக்டர் சிற்றரசு,கவிஞர் வயிர குத்து வும் கூட இருக்க, ஆரம்பமாகிறது இந்த வருடத்திக்கான குத்து பாட்டு.

அஜய்: சார்!இந்த ஒபெனிங் பாட்டை வைச்சு தான் இந்த படத்தை ஓட்டணும்.அதனாலே பாட்டு படு fast ஆ இருக்கணும்.
மி.டை:பிரமாதமா பண்ணிடலாம் சார்!நாம வழக்கமா பண்றதுதானே?
டைரக்டர்:ஆமா சார்!இந்த தடவையும் அதே மாதிரிதான்!மாத்தி கீது போட்டுடாதீங்க!
மி.டை:அது எப்படி சார் பண்ணுவேன்?எனக்கு தெரியாதா?அடுத்த முதல்வருக்கு எப்படி பாட்டு போடணும்னு?
வயிர குத்து:கவலை விடுங்கள்!உரலை எடுங்கள்!என் வரிகளுக்கேற்ற சரியான குரலைப் பிடிங்கள்!
அஜய்: ஆளாளுக்கு பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க! ட்யூனைப் போடுங்க!
மி.டை:இதோ ரெடி......

தான தானா தானன்னதானா
தான தான தன்னன்னா தனன்னா
லால லால லாலா லல்லல்ள்ளலாலல்லா
டங்கு தங்கு டங்கு
டுங்கு டுங்குடு டுங்கு

மி.டை:இதுதான் பல்லவி.
அஜய் :கவிஞரே!நல்லா பாத்துக்குங்க!பல்லவிலேயே என் எதிரிகளுக்கேல்லாம் பஞ்ச் வைக்கணும்!
வயிர குத்து:வைத்தால் போயிற்று!இதைக்கேளுங்கள்!

நான் தாண்டா தமிழ்நாட்டின் சொத்து
வாங்கிக்கடா என்னோட குத்து!
நான் அடிச்சா வாங்கிடுவே நீ டிக்கெட்டு,
ஏன்னா ஏற்கனவே நீ அப்பீட்டு! நான்தாண்டா
எம்.ஜி.ஆரின் ரிப்பீட்டு!

வயிர குத்து:எப்படி என் வரிகள்!?

மி.டை:ரொம்ப பிரமாதம் கவிஞரே!ஆனா எம்.ஜி.ஆர். பேர் வருதே,ஏதும் பிரச்சனை ஆயிடுமோ?
டைரக்டர்:என்னங்க பேசுறீங்க நீங்க!படத்தை நாமா ரிலீஸ் பண்ண போறோம்.கன் பிச்சர்ஸ் தானே?ஒருத்தரும் பிரச்சனை பண்ண மாட்டாங்க!
மி.டை:மத்த பக்கம் ஓகே!ஆனா மதுரையிலே கண்டிப்பா பிரச்சனை வரும்!அங்க அவங்களால ஒண்ணும் பண்ண முடியாதே?
அஜய்: ஆமாமாம்!எதுக்கும் நீங்க அதை மாத்திடுங்க!
வயிர குத்து:அப்படியென்றால் எம்.ஜி.ஆருக்கு பதிலா வாத்தியார் ன்னு போட்டுக்கலாம்.
டைரக்டர்:சூப்பர்ங்க!யாராவது கேட்டா,அண்ணனோட மூணாங் கிளாஸ் வாத்தியார்ன்னு சொல்லிக்கலாம்!
மி.டை:சரி!அடுத்து சரணம்!

இதோ,

தான தானா தானன்னதானா
தான தான தன்னன்னா தனன்னா
லால லால லாலா லல்லல்ள்ளலாலல்லா
டங்கு தங்கு டங்கு
டுங்கு டுங்குடு டுங்கு,

அஜய்:சார்!சரணத்துல கண்டிப்பா நான் என் ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணியே ஆகணும் சார்!
டைரக்டர்:ஆமாம் சார்!அதிலேயும் ஏதாவது அம்மா செண்டிமெண்ட் ரெண்டு சேத்து விடுங்க!
வயிர குத்து:
இதைக் கேளுங்கள்!

நாலு காலு இருக்கறதுதான்டா நாய்! உன்னை
பெத்தவதாண்டா உன்னோட தாய்!அவளுக்கு
போடாதடா கிழிஞ்ச பாய்!

அஜய்:சார் அப்படியே அந்த உழைப்பு மேட்டர்..........

வெய்யில்ல போனா வேர்க்கும்-அது
தான எல்லாரையும் ஈர்க்கும்-உழைச்சி பாரு
வாழ்க்கை இனிக்கும்.

அஜய்: ஆஹா பிரமாதம்!
மி.டை:இப்போ கடைசி சரணம்!

தான தானா தானன்னதானா
தான தான தன்னன்னா தனன்னா
லால லால லாலா லல்லல்ள்ளலாலல்லா
டங்கு தங்கு டங்கு
டுங்கு டுங்குடு டுங்கு

அஜய்: சார் இதுலே ஏதாவது தத்துவம் சொல்லுங்க சார்!என் ரசிகர்களுக்கு உதவியா இருக்கும்!

வயிர குத்து:

பாதையிலே திரிவானே பைத்தியக் காரன்
போதையிலே திரிவானே குடி காரன்
கீதையிலே சொன்னானே அன்று கண்ணன்,
பாட்டில் சொல்கிறேனே நான் உன் மன்னன்.
நல்லவர்க்கெல்லாம் நான்தானே அண்ணன்.

பாட்டிலில் இருக்கு பெப்சி
மாருதி விட்டது ஜிப்சி-நாலு நாள்
குளிக்கலன்னா ஆயிடுவே கப் சி!

அஜய்: ஆஹா லைன் ரொம்ப பிரமாதம் சார்!
டைரக்டர்:மியூசிக் டைரக்டர் சார்! அப்படியே முழுப்பாட்டும் பாடிக்காட்டிடுங்க!
அந்த கீதை மேட்டர் வர்ற இடத்துல மட்டும் background ல ஏதாவது சமஸ்க்ருத சுலோகம் போட்டுடுங்க கேட்கறதுக்கு டச்சிங்கா இருக்கும்.
அஜய்: இதுக்கு தான் சார் உங்களை மாதிரி புது டைரக்டர் படம் பண்றது!எவ்வளவு different ஆ யோசிக்கறீங்க?உண்மையிலேயே சூப்பர் சார்!
டைரக்டர்:ரொம்ப தேங்க்ஸ் சார்! அதே மாதிரி இடையிலே இங்கிலிஷோ, இல்லை புரியாத மாதிரி ஏதாவது ரெண்டு மூணு கேட்சிங் வோர்டை சேத்துவிட்டுடுங்க! பாட்டு ஹிட் ஆக அது ரொம்ப முக்கியம்!
அஜய்: ஆமாம் சார்!படம் பேர் தமிழ்ல வைச்சாத்தான் வரிவிலக்கு!பாட்டுக்கெல்லாம் இல்லை!எதுக்கு தேவையில்லாம அசிங்கமா பாட்டு முழுசும் தமிழ்லேயே இருக்கணும்?
மி.டை:எனக்கு தெரியாதா சார்?நான் என்ன இன்னிக்கு நேத்தா பீல்டுக்கு வந்தேன்?அசத்திடுறேன் பாருங்க!

"பிளிலாக்கி பிளிபிளிப்பி,பில்லிலாக்கி பிம்பலக்க லாலி,லாலி,லாலி.

நான் தாண்டா தமிழ்நாட்டின் சொத்து
வாங்கிக்கடா என்னோட குத்து!
நான் அடிச்சா வாங்கிடுவே நீ டிக்கெட்டு,
ஏன்னா ஏற்கனவே நீ அப்பீட்டு! நான்தாண்டா
வாத்தியாரின் ரிப்பீட்டு!

கோரஸ்:get thelife for u,fix the life for u achieve the life for u.

நாலு காலு இருக்கறதுதான்டா நாய்! உன்னை
பெத்தவதாண்டா உன்னோட தாய்!அவளுக்கு
போடாதடா கிழிஞ்ச பாய்!
வெய்யில்ல போனா வேர்க்கும்-அது
தான எல்லாரையும் ஈர்க்கும்-உழைச்சி பாரு
வாழ்க்கை இனிக்கும். (நான் தாண்டா )

(பரித்ராணாய சாதூர்நாம் வினாத்ராய என்று பகவத் கீதை சுலோகம் ஓடுகிறது.)


பாதையிலே திரிவானே பைத்தியக் காரன்
போதையிலே திரிவானே குடி காரன்
கீதையிலே சொன்னானே அன்று கண்ணன்,
பாட்டில் சொல்கிறேனே நான் உன் மன்னன்.
நல்லவர்க்கெல்லாம் நான்தானே அண்ணன்.

(நான் தாண்டா )

பிளிலாக்கி பிளிபிளிப்பி,பில்லிலாக்கி பிம்பலக்க லாலி,லாலி,லாலி

பாட்டிலில் இருக்கு பெப்சி
மாருதி விட்டது ஜிப்சி-நாலு நாள்
குளிக்கலன்னா ஆயிடுவே கப் சி!

கோரஸ்:get thelife for u,fix the life for u achieve the life for u.


ஆகா, 2010 ன் சூப்பர் ஹிட் பாட்டை முதன் முதலாக கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
என்ன பாட்டு! பிளிலாக்கி பிளிபிளிப்பி,பில்லிலாக்கி பிம்பலக்க லாலி,லாலி,லாலி.............................................................................

செவ்வாய், 2 மார்ச், 2010

ராச லீலை?

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
இப்பொழுதுதான் சன் நியூஸ் பார்த்துவிட்டு சுடச்சுட எழுதுகிறேன்.மற்றுமொரு சாமியார் scandal . இம்முறை மாட்டியிருப்பது சுவாமி(?) நித்யானந்தா .அதிர்ச்சியாக உள்ளது.ஒரு தமிழ் நடிகையுடன் இருக்கும் படுக்கையறை காட்சியை காட்டுகிறார்கள்.அந்த நடிகையின் முகத்தை மறைத்துவிட்டு,பெயர் R இல் தொடங்கும் என்கிறார்கள்.அது என்ன ஓரவஞ்சனை? சாமியாரை காட்டும்பொழுது நடிகையை காட்டக்கூடாதா?என்ன மீடியா தர்மம் என்று தெரியவில்லை.முழுதாக பார்க்கவில்லை.நித்யானந்தா தானா? என்று உறுதி செய்துவிட்டு சேனல் ஐ மாற்றிவிட்டேன்.பின்னே, அவரின் லீலைகள் முழுவதையும் காட்டிவிடுவார்கள் போலிருந்தது.வீட்டில் அப்பா,அம்மா,மனைவியுடன் பார்க்க முடியுமா?

உண்மையை சொல்லப் போனால் நான் நித்யானந்தா வின் மேல் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தேன்.கல்பதரு நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்று நினைத்திருந்தேன்.அதற்காக நான் தொடர்பு கொண்ட போது,கட்டணம் 5000 ரூபாய், 2000 ரூபாய் என்றார்கள்.ஜகா வாங்கிவிட்டேன்.ஆனால் இப்பொழுது வந்திருப்பது செக்ஸ் scandal .மேற்கொண்டு ஏதாவது வருமா தெரியவில்லை.மக்களின் கடவுள் பக்தியை குலைக்க நாத்திகர்கள் தேவையில்லை.இந்த மாதிரி சாமியார்களே போதும்.

இதையும் தாண்டி அவருக்கு ஏதும் விசேஷ சக்திகள் இருக்குமோ என்னவோ? யார் கண்டது? சாரு போன்றவர்கள் தான் தான் சொல்ல வேண்டும்.


வசூல் ராஜா படத்தில் கமல் சொல்வார்."கடவுள் இல்லை என்று சொல்பவனை நம்பலாம்.கடவுள் இருக்குன்னு சொல்றவனையும் நம்பலாம். ஆனால் நான்தான் கடவுள் என்று சொல்பவனை மட்டும் நம்பாதே! நீ பூட்ட கேசா ஆயிடுவே! " உண்மையோ என்று தோன்றுகிறது.

இது பற்றி இன்னும் விரைவாக பின்னர் எழுதுகிறேன்.



.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

கிரிக்கெட்-ஒரு தொடர்பதிவு.


இந்த தொடர் பதிவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை,இருந்தாலும் பொழுது போகாமல் இருப்பதிற்கு ஏதாவது செய்யலாமே என்று ஒரு எண்ணம்.ஆரம்பித்தவர்களுக்கு நன்றி. http://nee-kelen.blogspot.com/2010/02/blog-post_25.html


சச்சின் - தொடர்பதிவு

1. பிடித்த கிரிக்கெட் வீரர்

சச்சின்,ஷேன் வார்ன்,கபில்.(இன்னும் நீளும்)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், அசாருதீன்,ஜடேஜா.(முதலாமவர் நடத்தையால், மற்ற இருவர் மேட்ச் fixing )

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர்

மெக்ராத்,வாசிம் அக்ரம்,ஆம்ப்ரூஸ்

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்

அக்தர்

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர்

ஷேன் வார்னே, ஹர்பஜன்,சக்லைன்,

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர்

முரளி.

7. பிடித்த வலதுக்கை துடுப்பாட்ட வீரர்

சச்சின், லக்ஸ்மன்.

8. பிடிக்காத வலதுக்கை துடுப்பாட்ட வீரர்

தோனி

9. பிடித்த இடதுக்கை துடுப்பாட்டவீரர்

கில்க்ரிஸ்ட், கங்குலி,கிர்ஸ்டன்,யுவராஜ்.

10. பிடிக்காத இடதுக்கை துடுப்பாட்ட வீரர்

nil (இடது கை batsman அனைவரும் அழகுதான்)

11. பிடித்த களத்தடுப்பாளர்

ஜான்டி ரோட்ஸ், பாண்டிங்(டைரக்ட் ஹிட் specialist )ரெய்னா.

12. பிடிக்காத களத்தடுப்பாளர்

நெஹ்ரா,முனாப் படேல்,கங்குலி.

13. பிடித்த ஆல்ரவுண்டர்

கபில்தேவ், குளூஸ்னர்,காலிஸ்,

14. பிடித்த நடுவர்

சைமன் டோபல் ,பில்லி பௌடன்,வெங்கட்ராகவன்.

15. பிடிக்காத நடுவர் ஒரு இந்திய அம்பயர் ஜடேஜாவிற்கு அவுட் கொடுத்துவிட்டு நைசாக தலையை சொறிவது போல் சொறிந்தார்.(ஸ்ரீ லங்காவுடன் என்று நினைவு) பெயர் தெரியவில்லை.யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.

16 பிடித்த நேர்முக வர்ணனையாளர்

ரவி சாஸ்திரி,டோனி கிரேக்,
17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்

அருண் லால்.

18. பிடித்த அணி

இந்தியா

19. பிடிக்காத அணி

எதுவும் இல்லை.

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி

இந்தியா-ஆஸ்ட்ரேலியா.

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி

எதுவுமில்லை.

22. பிடித்த அணி தலைவர்

கங்குலி,மார்க் டைலர்.

23. பிடிக்காத அணித்தலைவர்

பாண்டிங்.

24. பிடித்த போட்டி வகை

டெஸ்ட் போட்டி.
25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி

சச்சின் – சேவாக், கில்க்ரிஸ்ட் - ஹைடன் ,ஜெயசூர்யா - கலுவிதரானா.
26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி

பிரபாகர்-சித்து.

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்

பிராட்மன்,சச்சின்,லாரா.

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் பிராட்மன்,சச்சின்,லாரா,கபில்தேவ்,ஷேன் வார்னே,மெக்ராத்,வாசிம் அக்ரம்.....................................
இங்கிருந்து யாராவது தொடர நினைத்தால் தொடரலாம்.எனக்கு தெரியப்படுத்தவும்.

சச்சின் டெண்டுல்கருக்கு அரசியல்வாதிகளின் வாழ்த்து


நாடு முழுவதும் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பாடப்போவது சச்சின் டெண்டுல்கரின் புகழே. அதில் தவறேதும் இல்லை.மனிதர் ஒரு சகாப்தம் என்பதில் சந்தேகமில்லை. மற்றவர்கள் செய்வதையே நாமும் செய்தால் எப்படி? நாம் சச்சினுக்கு வாழ்த்து சொல்வதை விட பிரபலங்களின் வாழ்த்துக்களை கேட்டேன்.(கற்பனையில் தான்).


மு.கருணாநிதி: அருமைத் தம்பி சச்சின்! உன் சாதனையை நினைத்து உளம் மகிழ்ந்தேன். நானும் இள வயதில் கிரிக்கெட் விளையடியாவன்தான். சற்றொப்ப 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு முறை மறைந்த டான் பிராட்மன் உடன் அளவளாவி இருந்த பொழுது அவருக்கு பின் நீதான் பல சாதனைகள் புரிவாய் என்று கணித்தவனே இந்த கருணாநிதி தான்.வேண்டுமானால் அவரிடமே அதை கேட்கலாம்.நானும் ஒரு கிரிக்கெட் அறிஞர் என்ற முறையில் உனக்கு வாழ்த்து சொல்வதில் ஒப்பற்ற மகிழ்ச்சி அடைகிறேன். சச்சினின் சாதனைகளை பாராட்டி, தமிழ் திரையுலகின் சார்பில், நேரு உள் விளையாட்டு அரங்கில், அடுத்த மாதம் ஒரு பிரும்மாண்ட பாராட்டு விழாவிற்கு நானே தலைமை தாங்கி நடத்தி வைப்பேன் என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். இந்த விழாவை கலைஞர்
தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து மகிழடா உடன்பிறப்பே!

ஜெயலலிதா:
சச்சின் 200 ரன்களை எடுக்க விடாமல் முட்டுக்கட்டை போட்ட கேப்டன் தோனியை வன்மையாக கண்டிக்கிறேன். கருணாநிதியின் சதியே இதற்கு காரணம்.எனினும், அதையும் மீறி சாதனை படைத்த சச்சின், தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும். என்ற கீதை மொழியை நிரூபித்துள்ளார். தமிழகத்தில் அது எப்போது நடக்கும் என உலகத் தமிழர்கள் தினந்தோறும் என்னிடம் கேட்கிறார்கள். விரைவில் என் தலைமையில் ஆட்சி நடக்கும் போது அது நிறைவேறும் என்று அவர்களுக்கு உறுதி கூறுகிறேன். தோனியை கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமை ஏற்று நடத்துவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

ராமதாஸ்: டெண்டுல்கரின் சாதனையை பாராட்டும் இந்த வேளையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு வன்னியர் கூட இல்லை என்பது கண்டனத்துக்குரியது. இதற்கு வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லாததே காரணம். அன்புமணி ராமதாசை விளையாட்டு துறை அமைச்சராக ஆக்கி விட்டால் எல்லாம் சரியாகி விடும். முதல் கட்டமாக பெண்ணாகரத்தில் பா.ம.க வெற்றி பெற்றால் அனைத்தும் சரியாகிவிடும்.

வை.கோ.:
17 ம் நூற்றாண்டிலே, இங்கிலாந்தை ஆண்டுகொண்டிருந்த பௌலரோ கீப்பர் என்ற மன்னரின் ஆணைப்படி உருவாக்கப் பட்ட இந்த கிரிக்கெட் போட்டியிலே, முடி சூடா மன்னனாக விளங்குகிறார் டெண்டுல்கர் என்பதை இந்த பிரும்மாண்ட பத்திரிகையாளர் கூட்டத்திலே, உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்ள நான் கடமை பட்டுளேன்.இந்த சாதனையை விளக்கி இந்தியாவிலிருந்து இங்கிலாந்த் வரை ஒரு சாதனை நடைப்பயணம் செல்ல நான் திட்டமிட்டுள்ளேன் என்று உங்களுக்கு தெரிவிக்கிறேன்

கே.வி. தங்கபாலு:
டெண்டுல்கரின் சாதனை தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ அதுதான் எங்களது கருத்து. அன்னை சோனியா காந்தி ஆணையிட்டால், உடனடியாக டெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவிப்போம்.

விஜயகாந்த்:
டெண்டுல்கர் 200 ரன் அடிக்க தினேஷ் கார்த்தியோடும்,தோனியோடும் கூட்டணி தேவைப்பட்டது.அவரால தனிய நின்னு ஒரு 100 ரன் அடிக்க முடியுமா? வேணும்னா கடவுளோடும்,மக்களோடும் கூட்டணி வைச்சுக்கலாம்.இந்த சவாலுக்கு அவர் தயாரா என்று கேட்டு சொல்லுங்க!

சீமான்:
தினேஷ் கார்த்திக் என்கிற தமிழன் அடிச்ச 79 ரன்களை பாராட்டாமல், டெண்டுல்கர் என்கிற வடநாட்டவரை பாராட்டறீங்கன்னா, தமிழ் உணர்வு செத்துப்போச்சுன்னு தானே அர்த்தம். யார் யார் எல்லாம் டெண்டுல்கரை வாழ்த்துரீங்களோ, அவங்க வீட்டு முன்னாடி ஒரு பெரிய போராட்டம் நடத்தப்போறோம்.


சுப்பிரமணியன் சுவாமி:
இந்த மேட்சே உண்மையான மேட்ச் இல்லை.டெண்டுல்கருக்கும் ஸ்மித்துக்கும் இடையில் தொடர்பு இருக்கு.சச்சினுக்கு சவுத் ஆப்ரிக்கால தங்கச் சுரங்கம் சொந்தமா இருக்கு. அவாள்லாம் சேர்ந்து இவாளை ஏம்மாத்திண்டு இருக்கா ! இந்த மேட்ச் fixing சம்பந்தமா எல்லா விவரமும் என்கிட்டே இருக்கு.கூடிய விரைவில் இது சம்பந்தமா நான் உங்களுக்கெல்லாம் தெரியப் படுத்திறேன்.



பின் குறிப்பு:
ip address கண்டுபிடித்து ஆட்டோ அனுப்புபவர்கள் கவனத்திற்கு, நான் தமிழ்நாட்டிலேயே இல்லை.குறைந்த பட்சம் ஒரு ஹெலிகாப்ட்டர் அனுப்பவும்.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஜால்ரா கவிஞர் ஜாலி


நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள். இரவு ஒரு அம்மா விசுவாசி நண்பருடன் டாஸ்மாக்கில் இருந்த பொழுது, மனிதர் புலம்பிக்கொண்டிருந்தார்.


"அம்மா மட்டும் இப்போ சி. எம்மா இருந்தாங்கன்னா இப்படியா இருக்கும், எவ்வளவு பேர் வாழ்த்து சொல்லிருப்பாங்க! பாராட்டியிருப்பாங்க! எல்லாம் நேரம்! அடுத்த வருஷம் பார்!" என்று புலம்பிக்கொண்டிருந்தார்.


நான் இரவெல்லாம் இதே நினைவாக மப்பில் இருந்த போது,எதற்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும், இப்பொழுதே கற்பனையில் இறங்கினால் என்ன? என்று தோன்றியது. அணுகினேன் ஜால்ரா கவிஞர் ஜாலி யை. சி.எம் அம்மாவுக்காக அவர் எழுதிய கவிதை இதோ! (கவிதை!கவிதை! படி.................?)


முன் குறிப்பு:

இந்த கவிதை முழுக்க முழுக்க கற்பனையே. படித்து விட்டு சிரித்து விட்டுபோகவும்



போயஸ் தோட்டத்து அம்மா - நீதான்

கும்தலக்கடி கும்மா- மற்றவரெல்லாம்

வுட்டாலக்கடி சும்மா!

கொடுத்து கொடுத்து சிவந்தது உன் கரம்.

அதனால் உனக்குத் தானே பெண்ணா கரம்?


சமூக நீதி காத்த வீராங்கனையே,

உன் அறிக்கை ஒவ்வொன்றும் ஏவு கணையே!

உயிரோடு இருந்திருந்தால் உன்னை

உச்சி மோர்ந்திருப்பார் பெரியார்.

உன்னால் தானே தமிழருக்கு கிடைக்க விருக்கிறது

முல்லைப் பெரியாறு!


தமிழர் வாழ்வில் ஏற்றி வைத்தாய் ஒளி

அதுதானே அவர்தம் வாழ்வுக்கான வழி?

உலகிற்கே நீதான் விழி!

இது தெரியாமல் பிதுங்குகிறது, உன்

எதிரிகளின் முழி!

பலர் போட்டார்கள் உன் மேல் பழி, நீ

எடுத்து வீசினாய் நீதி என்னும் கழி!

திரும்பவும் உனக்கு மகுடம்,

ஏனென்றால் அதுதான் உன் சுழி! உன்

எதிரி கூடாரம் ஆகிவிட்டது காலி. ஏனென்றால்

உனைப் புகழும் நான்

ஜால்ரா கவிஞன் ஜாலி!


பாரதி கண்ட புதுமைப் பெண்ணே, உன்னைப்

போற்றுகிறது இந்த பாரத மண்ணே! உன்

பெயர்தான் இனி எங்களுக்கு நாட்டுப் பண்ணே!


ஆண்டின் முதல் மாதம் ஜனவரி, நீதான்

தமிழ் நாட்டின் முகவரி. இதற்கு

முன்பிருந்தது ஒரு சர்வாதிகாரி.


தமிழகத்தின் கைவிளக்கேந்திய காரிகையே,

உன்னிடம் வைக்கிறோம் ஒரு கோரிக்கையே

அறிவித்து விடு இந்த நாளை

தமிழ் புத்தாண்டாய் ! மாறட்டும்

அது ஆண்டாண்டாய்!


இப்படிக்கு,

எல்லா முதல்வருக்கும்

ஜால்ரா அடிக்கும்

ஜால்ரா கவிஞர் ஜாலி !


(பெரியவர் மன்னிக்க.......................)

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

வாழ்த்துக்கள் சாரு


பின் நவீனத்துவ தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க,சொல்லப்போனால் முதன்மையான எழுத்தாளர் சாருநிவேதிதா. நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்களில் அவருக்கு எப்பொழுதுமே இடம் உண்டு. சொல்லப்போனால் அவர் என் குரு. எனக்கு மட்டுமல்ல. தமிழில் எழுதத் துவங்கும் எவருக்குமே அவர் மிகச்சிறந்த முன்னோடி. அதுவும் நாம் சுஜாதா வை இழந்து விட்ட இந்த தருணத்தில்.
அவர் எனக்கு முதலில் அறிமுகமானது இணையம் வழியாகத்தான்.என் நண்பர் ஒருவர் மிக்க படித்தவர்.பண்பாளர். வீட்டினுள் மிகப்பெரிய நூலகம் வைத்திருப்பவர்.சைவ மத வழி வந்தவராவர். அவர் தான் எனக்கு சாருவின் இணைய தளத்தை அறிமுகப்படித்தினார். அதற்காக நான் என்றென்றும் அவருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்.

சாருவின் புத்தகங்களை எங்கே வாங்குவது? என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த போது, அவர் தான் உயிர்மையில் தொடர்பு கொண்டு புத்தகத்தை வாங்கினார். அடுத்த நாள் அந்த புத்தகத்தை என்னிடம் தந்து, லட்சியம் இல்லாத எழுத்துக்கு சிறந்த உதாரணம் இந்த நாவல்தான். தயவு செய்து நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அந்த லட்சியம் இல்லாத எழுத்தை நான் படித்ததின் விளைவுதான் நீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

அந்த நாவலை முதலில் நான் படித்தது அதில் இருந்த பாலியல் வார்த்தைகளுக்காகத்தான்.(வயசு அப்படி!) பின்பு அதை படிக்க படிக்க சொல்லொனாத் துயரம் ஏற்பட்டது. பின்பு அதை மறுபடி மறுபடி வாசித்தேன். இன்று வரை அதை எப்பொழுது படித்தாலும் இனம் புரியாத உணர்வே ஏற்படுகிறது.

சரி. இப்பொழுது அதற்கு என்ன? ஒன்றுமில்லை. சாருவின் அந்த நாவல் ஜீரோ டிகிரி. அது இப்பொழுது கலிபோர்னியா ஸ்டேட் யுனிவெர்சிட்டி யில் Comparative World Literature என்ற பிரிவில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. http://www.calstate.edu/ இது பற்றி தெரிவித்திருப்பவர் சாரு தான். எவ்வளவு அவமானகரமான விஷயம் இது. ஒரு தமிழ் எழுத்தாளருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய இந்த கௌரவத்தை அவர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் தான் இன்று தமிழ் சமூகம் உள்ளது. http://www.charuonline.com/Feb2010/narseythi.html

இது ஏதோ விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்தது போன்ற செய்தி அன்று. தமிழ் எழுத்தாளர்கள் அனைவருக்குமே கிடைத்த கௌரவமாக இதை கருத வேண்டும்.

நம் தமிழ் நாட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவமே கிடைக்காது. விஜய் போன்றவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளருக்கு கிடைப்பதில்லை. இது எல்லாம் நன்றாக தெரிந்தவர்தான் சாரு. இருந்தும் தமிழில் விடாமல் எழுதுகிறார்.

அந்த பதிவின் கடைசியில் ஒரு நல்ல விஷயம் கூறியுள்ளார். அதை அப்படியே பிடித்து எங்காவது சென்று விடுங்கள் சாரு!ரஹ்மான் மாதிரி. நாங்கள் எட்டி நின்று பார்க்கிறோம். வழக்கம் போல் கருணாநிதி யை பாராட்டி விட்டு, வேட்டைக்காரன் படத்தை ப்ளாக்கில் பார்த்து, குமுதத்தில் மூழ்கி கிடப்போம். வாழ்த்துக்கள் சாரு.

சனி, 20 பிப்ரவரி, 2010

தண்டச்சோறு

முன் குறிப்பு:
இந்த கவிதை(?) என் பத்தொன்பதாவது ஆவது வயதில் எழுதப்பட்டது.

மொட்டை வெய்யில் அலைச்சல்
எழுதி குவித்த நூறு அப்ளிகேசன்கள்
பதில் சொல்லி அலுத்த ஆயிரம் இன்டர்வ்யூ கேள்விகள்
தோல்விகளையெல்லாம் வெற்றியின்
படிக்கற்களாக மாற்றிட நினைத்தாலும்
ஒவ்வொரு முறையும் கூசித்தான் போகிறேன்
"இன்னும் கொஞ்சம் சாதம் போடுமா!" எனும் பொழுது.

பின் குறிப்பு:
இந்த கவிதை(மறுபடியும்...........?) ஆனந்த விகடனுக்கு அனுப்பப்பட்டது.பிரசுரம் ஆனதா என்று தெரியவில்லை.ஏனென்றால் அப்பொழுது எனக்கு அட்ரஸே இல்லை.பிரசுரம் ஆகியிருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

அஜீத்தின் அட்டகாசம்


சமீபத்தில் கருணாநிதிக்கு திரையுலகின் சார்பில் மேலும் ஒரு பாராட்டு விழா நடந்தது.(இதற்கு ஏதாவது கின்னஸ் ரெகார்ட் இருக்குதா? இருந்தால், நம்மாள்தான் ரெகார்ட் ஹோல்டர்).

இதில் ஒன்றும் விசேஷசெய்தி இல்லை. அதில் அஜீத் பேசியதுதான் விசேஷம்.பொதுவாகவே அவர் எந்த ஒரு விழாவிலும் கலந்து கொள்வதை தவிர்ப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அப்படியே கலந்து கொண்டாலும் அபூர்வமாகத்தான் மைக் பிடிப்பார்.

இந்த முறை வெளுத்து வாங்கிவிட்டார்.திரையுலகில் நிலவி வரும் ஒரு விரும்பத்தகாத போக்கு எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம்,மனிதசங்கிலி,மறியல்,ஊர்வலம் நடத்துவது.காவிரியில் தண்ணீர் தரவில்லையா?நடத்து ஒரு அடையாள உண்ணாவிரதத்தை.

உண்ணாவிரதம் என்றால் காந்தி இருந்த உண்ணாவிரதம் என்றா நினைக்கிறீர்கள்? அட அசடுகளே? காலையில் வயிறு நிறைய சாப்பிட வேண்டியது.பின்பு உண்ணாவிரத பந்தலுக்கு வந்து உட்காரவேண்டியது.மைக் கிடைத்தவுடன் கர்நாடக காரனையோ,இல்லை கேரளா காரனையோ அடிப்பேன் உதைப்பேன் என்று சகட்டு மேனிக்கு வீராவேசம் பேசுவது.பக்கத்தில் இருக்கும் நடிகைகளிடம் சிறிது நேரம் கடலை போட்டுக்கொண்டிருந்தால், மாலை ஆகிவிடும். உடனே பழரசம் வந்துவிடும்.குடித்து விட்டு தமிழ்வாழ்க என்று முழங்கிவிட்டு, வீட்டிற்கு போய் பிரியாணியை ஒரு பிடி பிடிப்பது.இது தான் உண்ணாவிரதம்.

இந்த உண்ணாவிரதத்தை கலைஞர் டிவி யில் லைவ் ஆக பார்த்து நாம் மகிழலாம்.
ஆனால்,உடனே காவிரியில் தண்ணீர் கிடைத்துவிடும் என்று யாராவது எதிர்பார்த்தால் அதற்கு நடிகர்கள் பொறுப்பாளி ஆக முடியாது.அவர்கள் வேலை அந்த அரை நாள் உண்ணாவிரதம் மற்றும் மாநில வெறியை தூண்டும் பேச்சுக்கள் மட்டுமே.

அதற்கு அடுத்த வாரமோ அடுதத மாதமோ அவர்கள் படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் அவர்களுக்கு நல்லுணர்வு ஏற்பட்டு சக மாநிலத்தவர்களோடு சமாதானமாக போய் விடுவார்கள்.பின்னே காசு பார்க்க வேண்டாமா?பின் எதற்காக இந்த உண்ணாவிரத நாடகமெல்லாம்?

அஜீத் இதை போட்டு உடைத்துவிட்டார்.ஒரு சிலரின் வற்புறுத்தல் மற்றும் பயம் காட்டுதலே இதற்கு காரணம்.கருணாநிதி யின் ஆசி பெற்ற ஒரு சிலர்,அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த தொல்லையை திரையுலகின் மீது திணித்து வந்துள்ளார்கள்.

இது ஒரு விரும்பத்தகாத போக்கு.ஒரு போராட்டத்தில் கலந்து கொள்வதும்,கொள்ளாததும் அவரவர் விருப்பம்.அது அவர்களின் உரிமையும் கூட. ஏன் அவர்களுக்கு என்று எந்த ஒரு கருத்தும் இருக்காதா?அதே போல்தான் பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு முதல்வருக்கு ஜால்ரா தட்டுவது அவரவர் விருப்பம்.

இதை அஜீத் முதல்வர் முன்பாகவே பட்டவர்த்தனமாக பேசியிருப்பது, அவருடைய துணிச்சலை காட்டுகிறது.அந்த பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டிய ரஜினிக்கும் நமது பாராட்டுக்கள்.(தலைவா!நீங்க பேசியிருக்கனும்).

பூனைக்கு மணி கட்டியாச்சு.பார்ப்போம்.
அனைவருக்கும் வணக்கம்.நாட்டில் பொழுது போகாமல் கணிணியை வெறுத்து பார்த்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட படியாலும்,எனக்கும் வேறு வேலை இல்லாத காரணத்தாலும், இந்த வலைப்பூவை ஆரம்பித்தே தீர வேண்டும் என்று ஒசாமா....... மன்னிக்கவும்...ஒபாமா(அவர் எங்கள் குடும்ப நண்பர்)........கேட்டுக்கொண்டதாலும்,(நேற்று இரவுதான் தமிழ் படம் பார்த்தேன்..அந்த ஹேங்ஓவர்....... விமர்சனம் விரைவில்) இந்த வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.நம் தமிழ் நாட்டில் எதை செய்தாலும் யாருக்காவது டேடிகட் செய்தே தீர வேண்டும் என்பது பாரம்பரியம்.நான் இந்த வலைப்பூவை என்ஒன்று விட்ட சித்தப்பாவின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகளின் முதல் குழந்தைக்கு டேடிகட் செய்கிறேன். இனி வேட்டை ஆஆஆஆஆஆஆஆஆஅரம்பம்.